ஓம்
ஆரா அமிழ்து
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
செய்தி மூலம்: தர்மசக்கரம்
பூஜ்யஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் சேலம் அத்வைத ஆச்ரமத்துக்கு விஜயம்
செய்திருந்தார்கள். இது நடந்தது சுவாமிகள் மகாசமாதி அடைவதற்கு இரண்டு
ஆண்டுகளுக்கு முன் இருக்கும்.
சுவாமிகள் சேலம் வந்திருப்பதறிந்த அன்பர்கள் நாமக்கல், ஈரோடு, கோவை
மற்றும் தர்மபுரி பகுதியில் வசிப்பவர்கள் தம் நண்பர்களுக்கும் தெரிவித்து
வருவித்திருந்தார்கள்.
அப்படி வந்திருந்தவர்களுள் பழைய குருகுல மாணவர்கள் நிறைய பேர்
வந்திருந்தனர். அன்பர்கள் பழைய மாணவர்கள் எல்லோரும் சுவாமிகளின்
திருப்பாதங்களைத்தொட்டு பணிந்து சென்றனர்.
அன்று சுவாமிகளுடன் திரு அவினாசிலிங்கம் அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
அவர் சுவாமியின் கல்லூரித் தோழர். அந்நாளில் சென்னை ராமகிருஷ்ண மடத்துக்கு
இருவரும் சென்று வருவார்கள். அங்குத்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேர் சீடர்களின்
தரிசனத்தை முதன் முதலாக இருவரும் பெற்றர்கள். பழைய சம்பவங்களை திரு
அவினாசிலிங்கம் அவர்கள் அசை போட்டுக்கொண்டே மௌனமாக அமர்ந்திருந்தார்.
சுவாமிகளின் திருமுகத்தையே அடிக்கடி பார்ப்பதும் பிறகு சிறிது தியானம்
செய்வது போல இருப்பதுமாகவே அவர் இருந்தார்.
வழவழ கொழகொழ பேச்சு என்பது எப்போதும் சுவாமிகளிடம் கிடையவே கிடையாது.
அன்று வந்திருந்த அன்பர்களிடம் ஓரிரு வார்த்தைகள், “நல்லது. எப்போது
வந்தீர்கள்?
வீட்டில் அனைவரும் நலமா?” என்று குடும்ப நலம் விசாரித்து அனுப்பினார்.
திரு அவினாசிலிங்கம் அவர்கள் ஏதோ சுவாமிகளிடம் கேட்கவேண்டும் என்று
நினைத்துக் கொண்டே இருக்கிறார் என்பதை அவர் முகக் குறிப்பில் தெரிந்தது.
அன்பர்கள் பலரும் சென்றபிறகு குருகுலத்தில் படித்த ஓரிரு மாணவர்கள்
மட்டுமே இருக்கும்போது திரு அவினாசிலிங்கம் அவர்கள், “சுவாமி,
வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் தங்களுக்குப் பாத நமஸ்காரம் செய்தார்கள்.
ஆனால், நீங்கள் ஒருவரைக் கூட வாழ்த்த வில்லையே ஏன்?” என்றார்.
இப்படி ஒரு கேள்வியை இவர் கேட்கிறாரே என்று குருகுல மாணவர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
சுவாமிகளின் நீண்ட கரங்கள் இரண்டும் தங்களின் சிரசில் பட்டு
சிறப்புற்றவர்கள் அம்மாணவர்கள். சுவாமிகளின் தோளில் தோரணமாகத் தொங்கி
விளையாடியவர்கள். சுவாமிகளுடன் வாழ்ந்தவர்களின் மனதில் எழுந்த அதிர்ச்சி
அலைகள் அடங்கும் பொழுதே சுவாமிகள் அவரிடம் கூறினார்,” அப்படிச் செய்தால் அது
அர்த்தமற்றது. அவரவர்கள் செய்த வினைப் பயனை அவரவர்கள் அனுபவித்துத் தான்
ஆகவேண்டும்.”கிரிஸ்தவ மதம் தவிர வேறு எந்த மதமும் பாபம் செய்தவர்களை
மன்னிப்பதில்லை/” என்றார். அந்த பதிலைக்கேட்டு அனைவரும் முகம் மலர்ந்தனர்.
சுவாமிகளின் நண்பரும் அதன் பொருளை உணர்தனர்.
வெ.சுப்பிரமணியன் ஓம்
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.